வாடகைத் தாய் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
‘வாடகை தாய்’ முறையில் ஏராளமான குளறுபடிகளும், மோசடிகளும் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இதனை சரிசெய்யும் விதமாக ‘வாடகை தாய் ஒழுங்குமுறை மசோதாவை’ மத்திய அரசு உருவாக்கி கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேற்றியது.
எனினும், பெரும்பாலான மாநிலங்களவை உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா அங்கு நிறைவேற்றபடவில்லை. இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்த இரண்டு அம்சங்களை நீக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதாவது, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கு நெருங்கிய உறவு முறையில் இருக்கும் பெண்ணையே தேர்வு செய்ய வேண்டும்,
5 ஆண்டுகள் வரை குழந்தை இல்லாத தம்பதியினரே இந்த வாடகை தாய் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகிய இரண்டு அம்சங்களை நீக்குமாறு கோரப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அண்மையில் அனுப்பப்பட்டது. அங்கு இந்த இரண்டு அம்சங்களும் நீக்கப்பட்டன. இந்நிலையில், திருத்தங்களுடன் கூடிய இந்த வாடகைத் தாய் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:-
இந்த மசோதா வாடகை தாய் முறையை வணிகமயமாகமல் தடுக்கவும், வாடகை தாயாக வரும் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் விதமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
எனவே, அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.