புதுதில்லி:-
மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சந்தன் மித்ரா(65) நேற்று (புதன்கிழமை) இரவு தில்லியில் காலமானார்.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இரவு காலமானதாக அவரது மகன் குஷன் மித்ரா சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சந்தன் மித்ரா மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த மித்ரா, ஜூலை 18, 2018 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.
மாநிலங்களவை பாஜக உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா தனது நெருங்கிய நண்பர் சந்தன் மித்ராவை இழந்ததாக சுட்டுரை பக்க இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் “1972 இல் பள்ளி பயணத்தின் போது சந்தன் மித்ராவும் நானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். ஓம் சாந்தி,” என்று தாஸ்குப்தா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன்,சந்தன் மித்ரா அவர்கள் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.