வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 101 உயர்ந்து ரூபாய் 2,234.50 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது. முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை 2 மாதங்களில் ரூ.369 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது. தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
இதனிடையே வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.