கான்பூர்:-
கான்பூரில் 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக வந்த விகாஸ் துபேவை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது சொந்த கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீஸ் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.
இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.
போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் விகாஸ் துபேயின் 2 கூட்டாளிகள் 3-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகால் கோவிலுக்கு வந்தபோது, இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்ற உஜ்ஜைனி போலீசார் விகாஸ் துபேயை கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, உத்திரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீசார் ‘ட்ரான்சிஸ்ட் ரிமாண்ட்’ மூலம் காவலில் எடுத்து இன்று காலை கான்பூருக்கு அழைத்து வந்தனர். கான்பூருக்கு காரில் அழைத்து வந்த போது, பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாக தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தை பயன்படுத்தி, விகாஸ் துபே போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடத்திலேயே உயிரிழந்த விகாஸ் துபேயின் உடல் அருகிலுள்ள லாலா லஜபதிராய் (LLR) மருத்துவமனை அல்லது ஹாலெட் (Hallett) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு கான்பூர் அருகே சச்சேந்தி (Sachendi) எல்லையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
விகாஸ் துபே மீது 60-ம் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது 20 வருடங்களுக்கு முன்னர் பிஜேபி MLA ஒருவரை காவல் நிலையத்திற்குள் வைத்து சுட்டுக் கொலை செய்தான் விகாஸ் துபே. கான்பூரில் போலீஸாரை சுட்டுக் கொன்ற பிறகு ராஜஸ்தானின் கோட்டா சென்று அங்கு அம்மாநில போலீசாரிடம் சரண் அடைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரணடையும் முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஹரியானா அருகே ஒரு விடுதியில் தங்கி உள்ளான். பின்னர் அங்கிருந்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் சென்று அங்குள்ள பிரபலமான பழங்கால மகாகால் கோவிலுக்கு சென்றபோது தகவல் தெரிந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே விகாஸ் துபே கைது செய்யப்பட்டால் என்கவுண்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று முன்னரே அவரது தாயார் கூறியது குறிப்பிடத்தக்கது.