தங்க நகைகளை ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தங்க நகைகளை 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் (Piyush Goyal) தங்க நகை விற்பனையார்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் (Hallmark) முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது.
WTO எனப்படும் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்திய உட்பட 164 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் WTO தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது.
நம்மிடம் உள்ள ஆபரண பயன்பாட்டின் காரணமாக, உலக அளவில் அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மேலும், மற்றவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று நாம் நினைப்பதால் நகை விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். பாதுகாப்பான முதலீடு செய்யும் வகையில் மக்கள் தங்க நகைகளை வாங்கி வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்ன்றனர்.
ஆனால் தாங்கள் வாங்க கூடிய தங்கம் எந்த அளவிற்கு தூய்மையானது என்ற கவலை பெரும்பாலானோர் மனதில் உள்ளது.
இந்நிலையில், இந்த குறையை போக்க பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதை தொடர்ந்து இது தொடர்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை காணலாம்.
இனி, தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.
இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
இதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இனி, விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும், இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் .
இதுவரை 40 சதவீத நகைகள் மட்டுமே இத்தகைய முத்திரை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு 234 மாவட்ட மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 28,849 வர்த்தகர்கள் பிஐஎஸ் பதிவு பெற்றுள்ளனர். தற்போது மேலும், சில வர்த்தக நிறுவனங்கள் தாமாக முன்வந்து பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்கின்றன.
இனி, மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
சரி, இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இனி அனைத்து நகைக்கடைக்காரர்களும், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் நம் வீட்டில் பழைய தங்கம் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
அவ்வாறு வீட்டில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு இந்த விதி எந்த பாதிப்பையும் ஏற்படுதாது, அவற்றை எளிதாக நாம் நகைக்கடைக்காரர்களுக்கு விற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.