புதுடெல்லி
நம் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன், நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், இரண்டாவது அலையின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டோம் என்று கூற முடியாது.
அதே நேரத்தில் தடுப்பூசி வழங்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. நம் நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட ‘டோஸ்’ தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை உருவானாலும், இரண்டாவது அலையைப் போல மிகத் தீவிரமாக இருக்காது.தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலையின் வைரஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஷாஹித் ஜமீல் கூறியுள்ளதாவது:ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தற்போது மூன்றாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது.
அதேபோல் அமெரிக்காவிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. நம் நாட்டில் உயிர் பலி 1.2 சதவீதமாக உள்ளது. இரண்டாவது அலை, எண்டமிக் நிலையை இன்னும் எட்டவில்லை. அதனால், நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மூன்றாவது அலை ஏற்பட்டாலும், இரண்டாவது அலையைப் போல மோசமாக இருக்காது; சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.