மும்பை:-
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிக்கப்பட்டது.
இது குறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது:-
இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
ஜியோபோன் நெக்ஸ்ட் கூகுள் மற்றும் ஜியோ இரண்டிலிருந்தும் பயன்பாடுகளின் முழு தொகுப்பையும் பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மூலம் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முழு பயனையும் உபயோகிக்க முடியும். உலகளவில் மிகவும் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும்
நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக கூகுள் க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
5ஜி-க்கு விரைவாகவும், தடையின்றி மேம்படுத்தவும் ஜியோ தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 5ஜி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Voice Assistant, திரையில் உள்ள எழுத்துகளை வாசிக்கு வசதி, மொழிபெயர்ப்பு மற்றும் AR Filter கொண்ட ஸ்மார்ட் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மோர்ட்போனில் உள்ளது.
இது 4ஜி, மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பேசிய கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை,
இந்தியாவின் தனித்துவமான தேவைகளுகேற்ப புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்துடன் வணிகங்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளிவரும் எனக் கூறினார்.
ஜியோ பல்கலைக்கழகம்
முன்னதாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி பேசியதாவது,
ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இப்பல்கலைக்கழகம் தனது முதல் கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டிஜிட்டல் மீடியா மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவுகளை துவங்க உள்ளது என்று கூறினார்.