ராஞ்சி:-
ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் (School Education and Literacy Minister) ஜகர்நாத் மஹ்தோ (Jagarnath Mahto) அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜகர்நாத் மஹ்தோ:-
ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் நியாயம் இல்லை என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைப்பை மேம்படுத்த இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் அவசியம் என்று கூறிய அவர், பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசாங்கம் செலவழித்து வருகிறது, ஆனாலும் தனியார் பள்ளிகளை நோக்கியே மக்கள் படையெடுக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தெரிவித்தார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் கூறியுள்ளார்.