புதுடில்லி:-
ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்ய அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்ரல் 30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பர்ன்சிங் மூலம் ரவிசங்கர் பிரசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களின் அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், அனைத்து மாநில அரசுகளும், இணையம் வழியாக பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. எனவே, மக்களின் வசதிக்காக, பாரத் நெட் மூலம் இணையச் சேவையை பலப்படுத்துவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவர் தெரவித்தார்.