டெல்லி:-
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் காரை பரிசாக வழங்குவது முதல்முறை அல்ல. கடந்த 2013ம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளது.
பின்னர் நிறுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையை ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தற்போது மீண்டும் செயல்படுத்த உள்ளது. நிர்வாக குழுவின் அனுமதி கிடைத்தபின் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்நிறுவனம் இந்த ஆண்டு 22,000 பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.