நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயார்: டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக காவலர்…
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொள்ளப்பட்டார், அந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் தெலங்கானா போலீஸ் என்கவுன்டரில் சுட்டு தள்ளியது. இந்த செய்தியால் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.இதில் ஈடுபட்ட 6 பேரில், ஒருவன் 16 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பதால் அவனுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் ஒருவர் மட்டும் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். எஞ்சியிருக்கும் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஆட்கள் இல்லை என்ற செய்திகள் பரவியது .
இதனை அறிந்த ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் திகார் சிறை தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ‘நிர்பயா வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிக்கு நான் தயாராக இருக்கிறேன்.நான்கு பேரையும் தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என தெரியவந்தது .இதனால் அவர்களின் தண்டனை தள்ளிப் போகிறது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். குற்றவாளிகளான அவர்களை தூக்கிலிடும் பணியை செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இவர் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக முன்னால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் அண்ணா பதக்கம் மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.