டெல்லி:-
இந்த ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பிளஸ் 2வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி விதியை தளர்த்தி உள்ளதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் தெரிவித்துள்ளார்.
ஜே.இ.இ. (JEE) எனப்படும் Joint Entrance Exam நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது அவர்களின் தகுதித் தேர்வுகளில் முதல் 20 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஐஐடியின் விதி. இந்நிலையில் நாடு முழுவதும் கொரானா பரவல் காரணமாக தேர்வு வாரியங்கள் தேர்வுகளை ரத்து செய்துள்ளது இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐஐடி நுழைவுத் தேர்வில் அடிப்படை தகுதி மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் சேர்வதற்காக ஜாயின்ட் என்றன்ஸ் எக்ஸம் என்ற பெயரில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் ஐஐடியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
முதலில் ஜேஇஇ மெயின்ஸ் (JEE Mains) என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, தற்போது வரும் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.