லடாக்:-
லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்து வருகிறது. அதற்கு நிகராக, இந்தியாவும் தனது படைகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் லடாக் பகுதி அதில் ஒன்றானது. ஆனால் சீனப்படைகள் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் காணப்பட்டது.
எல்லையில் சீனா தனது படைபலத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவத்துடன் உள்ள மோதல்போக்கு காரணமாக சீனா பலத்தை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளதால் அங்கு இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. இந்தியப் படைகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 100 கூடாரங்களை அமைத்துள்ள சீன ராணுவத்தினர் அங்கு பதுங்கு குழிகள் போன்றவற்றையும் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்துள்ளனர். பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நார்வானே எல்லைப் பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
லே ராணுவத் தலைமையகத்தில் அவர் வடக்கு பிராந்திய தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் YK ஜோஷி மற்றும் 14 Corps தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே லடாக்கில் கடந்த வாரம் இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணி மேற்கொண்ட போது அவர்களை சீனப்படையினர் சுற்றி வளைத்து சிறைபிடித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதனால் இந்திய -சீன ராணுவத்தினரிடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானதை தொடர்ந்து, இருதரப்பு கமாண்டர்களும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்பிரச்சினை பிரதமர் மோடியின் கவனத்துக்கும் ராணுவ அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது.
சுமாா் 3,480 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய – சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தொடா்ந்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் சில வாரங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இரும்புக் கம்பிகள், கம்புகள் மற்றும் கற்களால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவத்தில், இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.