போபால்:-
இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது.
ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில் (Bina), ரயில்வேக்கு சொந்தமான காலி நிலங்களில் சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ரயில்களை இயக்க சூரிய ஆற்றல் (Solar Power) பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என ரயில்வே கூறியுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில், இங்கிருந்து 25,000 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் உதவியுடன் ரயில்களை இயக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். தற்போது காலியாக உள்ள ரயில்வேயின் நிலத்தில் பிஹெச்எல் நிறுவனத்துடன் (BHEL) இணைந்து, ம.பி.,யின் பினாவில் 1.7 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் (Solar Power Station) வெறும் எட்டு மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம் இல்லை.
உலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள் சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றன.
சில ரயில்களின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி பேனல் (Solar Panel) இந்திய ரயில்வே நிறுவியுள்ளது. ரயில் பெட்டிகளில் உள்ள விளக்குகள் மின்விசிறிகள் ஆகியவை இயக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது வரை, எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை.
அதேபோல சில ரயில்வே நிலையங்களில் மேற்கூரைகளில் சோலார் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் மூலமாக வருடத்திற்கு 24.82 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கூறப்படுகிறது சூரிய மின் உற்பத்தி நிலையம் நேர் மின்னோட்டத்தை உருவாக்கும் இதை இன்வெர்ட்டர்கள் மூலமாக மாற்று மின்னோட்டம் ஆக மாற்றப்பட்டு ரயில்வே லைனுக்கு அனுப்பப்படும் இதன் மூலமாக ரயில்வேக்கு வருடத்திற்கு 1.37 கோடி மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.