தூத்துக்குடி:-
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரபல கிரிக்கெட் விரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சிறை மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடைபெற்று இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திரைத் துறையினர் மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட்டர் மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், அடிப்பவனுக்கு தேவை ஆயுதம், வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்குக, நிறத்துக்காகன்னு போய் இப்போ எதுக்கு சாகுறோம்னு தெரியாம செத்துப் போய்ட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல, மனிதம் எங்கே என தமிழில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதேபோல் பாலிவுட் பிரபலங்களான ரித்தேஷ் தேஷ்முக், அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.