காந்திநகர்:-
குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், குஜராத்தின் சபர்மதி ஆற்றில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஐஐடி காந்திநகர் தெரிவித்துள்ளது.
சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சபர்மதி மட்டுமல்லாமல் கங்காரியா, சந்தோலா ஏரியின் நீர் மாதிரிகளை சோதனை செய்ததிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சபர்மதி ஆற்றில் இருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 549 சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது, மற்றும் 402 காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டவை
தண்ணீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை, ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
அதேபோல, அசாம் தலைநகர் குவஹாத்தி பகுதியில் உள்ள ஆறுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வீரியமிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி காந்தி நகர் உட்பட இந்தியாவில் எட்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
இயற்கையான நீரிலும் வைரஸ் உயிர்வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. எனவே, நாட்டின் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களை ஆராய வேண்டும், ஏனெனில் வைரஸின் பல தீவிரமான உருமாற்றம் இரண்டாவது அலைகளில் காணப்படுகின்றன. இந்த ஆய்வு முடிவு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் காணப்படுகிறதா என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். மேலும், கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தண்ணீரால் பரவலாம் என்ற கருத்து உருவாகிறது.
ஒருவேளை இது உண்மையென்றால், மூன்றாம் அலையின் வீரியமும், அது வாங்கும் பலி எண்ணிக்கையின் அளவும் அதிகமாக இருக்கும்.