பெங்களூரு:-
பெங்களூரு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் இலவச அரசுப் பேருந்து சேவை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் ஊரடங்கால் ஆங்காங்கே சிக்கியுள்ள தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வசதியாக, ஞாயிற்றுக்கிழமை (நேற்று) முதல் 3 நாள்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ள எடியூரப்பா, ஒரே நேரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் திரண்டுவிடக் கூடாது என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா கால ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்திருக்கிறது.
முன்னதாக அரசு பேருந்துகளில் சொந்த கிராமங்களுக்கு திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என முன்னர் வெளியான தகவலுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், கர்நாடக அரசு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிவித்துள்ளது.