பார்மர்:-
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு திருமணம் செய்வதை கலாச்சாரமாகவே கொண்டு வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை முறையை கண்டு பலர் வியப்படைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் பார்மர் (Barmer) மாவட்டத்தில் உள்ள தேரசர் (Derasar) என்ற கிராமத்தில் தான் ஒரு விசித்திர/வினோதமான பழக்கம் காணப்படுகிறது.
இந்த சிறிய கிராமத்தில் வசிக்கும் அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகளாம். சுமார் 600 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் இந்த வழக்கம் மத சடங்காக இல்லாமல் ஒரு கலாச்சார முறையாக பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் பிற மதத்தினரான இஸ்லாமியர்களும் (70 இஸ்லாமிய குடும்பங்கள் இங்கு வசித்து வருகிறது) கூட இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
இதற்கு ஒரு காரணத்தையும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதாவது அந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏனென்றால் முதலாவதாக திருமணம் செய்த மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.
இதனால் குழந்தைக்கு ஆசைப்படும் ஆண்கள் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சூழல் உருவாகிறது என்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
அங்கு வசிக்கும் பல ஆண்கள் முதல் மனைவி வழியே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து முயற்சித்து தனது வாழ்நாளில் பாதி நாட்கள் வரை காத்துகிடந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்டபோது, குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.
அதே சமயம் இந்த கிராமத்தில் மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது இதனால் கர்ப்பிணி பெண்கள் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்ற காரணத்தால் ஆண்கள் மற்றொரு திருமணத்தை செய்து கொள்கிறார்கள் அதனால் முதல் மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இரண்டாவது மனைவி வீட்டு பொறுப்புகளை கவனித்துக்கொள்வார் இதே போன்று இரண்டாவது மனைவிக்கு முதல் மனைவி கவனித்துக்கொள்வார். மொத்தத்தில் இது ஒரு வினோத விசித்திர கிராமம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் தங்களுக்குள் எந்தவித பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையால் சண்டையிடாமல் உள்ளனராம்.
பெரும்பாலான 90’s Kids ஒரு திருமணமே ஆகாமல் காலம் கடத்தும் நிலையில் இதுபோன்ற இரண்டு திருமணங்கள் மேற்கொள்ளும் வழக்கம் உள்ள கிராமத்திற்கு விரைவில் படை எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.