ஹைதராபாத்:-
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தேநீர்க் கடை உரிமையாளர் சுரேஷ் கங்வாலின் மகள் ஆஞ்சல் கங்வால். இவர் ஹைதராபாத்தில் உள்ள துன்டிகல் விமானப் படை அகாடமியில் விமானப்படையின் களப்பணிப் பிரிவில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இந்திய விமானப்படை அதிகாரியாகவும், விமானப் படைப் பயிற்சியில் ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கியதற்காக குடியரசுத் தலைவர் பட்டமும் பெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள துன்டிகல் விமானப் படை அகாடமியில் விமானப்படை படிப்பில் களப்பணிப் பிரிவில் பயிற்சி பெற்று வந்தவர் ஆஞ்சல் கங்வால். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆஞ்சல் கங்வாலின் தந்தை சுரேஷ் அப்பகுதியில் சிறிய தேநீர்க் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய இரண்டாவது மகள்தான் 24 வயதான ஆஞ்சல் கங்வால்.
இது குறித்து அஞ்சல் கூறுகையில்:-
நம்ப முடியாத நிகழ்வாக உள்ளது. எனது கனவு நினைவானது என்று தெரிவித்தார். ஆஞ்சல் கங்வால், நீமுச்சில் உள்ள சீதாராம் அரசுக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு அரசு போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்கினார். மத்தியப் பிரதேச காவல் உதவி ஆய்வாளர், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பதவிகளுக்கு அவர் தனித்தனியாகத் தேர்வெழுதினார்.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு முதலில் தேர்ச்சியான ஆஞ்சல், அடுத்த எட்டு மாதகால இடைவெளியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பதவிக்கும் தேர்வானார். இத்துறையில் பணியாற்றிக்கொண்டே விமானப்படைப் பிரிவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார் ஆஞ்சல்.
மாநிலத்திலிருந்து தேர்வான ஒரே நபர் ஆஞ்சல் கங்வால். இவர் தொடர்ந்து ஐந்து முறை நுழைவுத் தேர்வை எழுதிய ஆஞ்சல் கங்வால் ஆறாவது முறை எழுதிய தேர்வில்தான் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
இவரது இந்த சாதனையை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பாராட்டியுள்ளார்.