காந்திநகர்:-
ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபன்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். கடந்த தாலிபன் ஆட்சியின்போது போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, ஹெராயின் என்ற போதைப்பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்து உலகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுப்பப்படும்.
இந்நிலையில், தற்போது தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அந்த நாட்டிலுள்ள கந்தஹார் நகரிலிருந்து 3 டன் ஹெராயின் போதைப்பொருள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்திருப்பதாக டெல்லி வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் முந்த்ரா துறைமுகத்தில் வந்து இறங்கிய கன்டெய்னர்களை அதிரடி சோதனை செய்தனர்.
ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்துக்காக அனுப்பப்பட்டிருந்த இரண்டு கன்டெய்னர்களில் போதைப்பொருள் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
1,999 கிலோ போதைப்பொருள் ஒரு கன்டெய்னரிலும், மற்றொரு கன்டெய்னரில் 988 கிலோ போதைப்பொருளும் இருந்தது. போதைப்பொருளை மறைப்பதற்காக கன்டெய்னரில் டால்கம் பவுடரும் சேர்த்து அனுப்பப்பட்டிருந்தது.
ஆப்கானிலிருந்து இவை ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இவ்வளவு போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்டதில் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், குஜராத்தில் டெல்லி, சென்னை, அகமதாபாத், காந்திதம் மற்றும் மாண்ட்வி ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய தடுத்தல் வேட்டையில் சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஹெராயின் கடத்தல் குறித்து பல அதிகாரிகளும், நிறுவனங்களும் விசாரணையில் சிக்கியுள்ளனர் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் தொடர்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி, டெல்லியில் தங்கியிருந்த ஏராளமான ஆப்கன் பிரஜைகள் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் காந்திநகரிலுள்ள மத்திய தடயவியல் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது அது உயர்தரமான ஹெராயின் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ஹெராயின் மதிப்பு ரூ.21,000 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கனில் தரமான ஹெராயின் கிடைப்பது வழக்கம். ஒரு கிலோ ஹெராயின் சர்வதேச மார்க்கெட்டில் ரூ.7 கோடி. இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலும், இது உலகின் மிகப்பெரிய ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே கடந்த ஜூலை மாதம், நவி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் சில கன்டெய்னரில் இருந்து சுமார் 300 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீனயுகத்தில் ஒரு நாட்டின் வளர்ச்சி, வளங்களை நிர்மூலமாக்க அணுகுண்டுகள் அனுப்பிய காலம் மெல்ல காலாவதியாகிக்கொண்டிருக்க, பொருளாதாரப் போர்(Economic war), உயிரியல் போர் (Bio War), இணையப் போர் (Cyber war) எனப் போர்த்தொடுக்கும் யுக்திகள் காலத்திற்கேற்ப நவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு மறைமுகப்போர் முறையைத்தான் இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆம், அது ஹெராயின் மாஃபியா. இதை ஒரு போதைப் போர் (Narcotics War) என்றும்கூட சொல்லலாம்.