டெல்லி:-
கோவிட் 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல், தற்போது சீராக குறைந்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பு பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் முதல் அலை பாதிப்பின்போது ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார். 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நேரடியாக உரையாற்றுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.