புதுடெல்லி:-
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளின் பின்னணியில் பல சிக்கன நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எடுத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக குடியரசுத் தலைவருக்காக திட்டமிடப்பட்ட 10 கோடி மதிப்பிலான லிமௌஸின் (Limousine) ஆடம்பர காரை வாங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர் அளிக்கும் விருந்திலும் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகம் செலவு செய்து மலர் அலங்காரங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்பதுடன் அங்கு நடக்கும் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கவும் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஏற்படும் செலவினங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ராம்நாத் கோவிந்த் தனது சம்பளத்திலிருந்து 30% பிடித்தம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
இவற்றில் இருந்து மிச்சம் பிடிக்கப்படும் தொகை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.