புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அதில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதனையடுத்து பேசியவர்,” புதுச்சேரியில் எங்கள் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம், அதில் எங்களுக்கு பெருமை உண்டு. மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து போரோடினோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளனர். புதுச்சேரியை மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41% வரி கொடுத்தார்கள், ஆனால் புதுச்சேரிக்கு 21% வரி மட்டுமே கொடுத்தார்கள்.
மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சித்தது, ஆனால் நாங்கள் இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கிறோம். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும், டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் சில தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தனர். காங்கிரஸ் அரசு கொரோனா காலத்தில் செயல்பட்டு தொற்றைக் கட்டுப்படுத்தியது. கொரோனா காலத்தில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மக்களுக்காக சேவையாற்றினர்” என கூறினார்.
மேலும் முதல்வர் நாராயணசாமி தனது 4 ஆண்டுகால ஆட்சியில் செய்த நலத்தித்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து உருக்கமாக பேசி வருகிறார்.