சென்னை:-
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். அதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில்:-
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்:-
அதில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.