ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை வீரர்களின் தினத்தை முன்னிட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மூன்று புதிய முன்முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு ரூபாய் 320 கோடியை முன்னாள் படைவீரர் நலத்துறை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். குறிப்பாக கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கான நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் 1,66,000 பேர் பயனடைவார்கள்.
இன்னுமொரு பெரிய சாதனையாக, ஏப்ரல்-டிசம்பர் 2021 வரை, அரசுத் துறை/பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் மற்றும் தனியார் துறைகளில் புதிதாக ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு மீள்குடியேற்ற இயக்குநரகம் சுமார் 7,900 பணிக் கடிதங்களை வழங்கியுள்ளது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் உள்ளிட்டவற்றை விரைவாக நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இணையதளம் (https://rakshapension.desw.gov.in) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.