தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.
இதனைப் பரிசீலித்து தமிழக அரசு, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் நேற்று அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இதனிடையே நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 17ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், குடும்ப அட்டை தாரர்கள் அத்தியாவசிய சேவைகளை பெற ஏதுவாக, 17ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.