தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக உள்ளவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
இவர் வெளியிட்ட கார் டிரைவர் ஒருவரின் குடும்பத்தை குறித்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது நண்பர்களுடன் காலை 4 மணியளவில் மும்பையிலிருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் காரை ஓட்டிய டிரைவர், ‘சார்,என்னுடைய போன் பேட்டரி காலியாகி விட்டது. உங்களது போனை பயன்படுத்திக் கொள்ளவா??’ எனக் கேட்டுள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தியின் நண்பரும் சரி என்று அந்த டிரைவரிடம் போனை கொடுத்துள்ளார்.
தனது மகளுக்கு அழைத்த டிரைவர் போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசியுள்ளார் மறுமுனையில் பேசிய டிரைவரின் மகள் தன்னை ஐந்து மணிக்கு அழைக்க சொன்னதற்கு எப்போது என்னை அழைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட டிரைவர் சற்று தடுமாற்றத்துடன், ‘பரவாயில்ல மா. இப்போ எழுந்து போய் சமைச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு மா’ என்றார். அதற்கு மகள் ‘அப்பா நான் 4 மணிக்கே எந்திருச்சு சமைச்சு ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்’ என மகள் கூறியுள்ளார்.
இந்த, தந்தை – மகள் உரையாடலை ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு, இது குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி டிரைவரிடம், ‘யாரெல்லாம் வீட்டில் இருக்கிரீர்கள்’ என்று கேட்கையில் அதற்கு பதிலளித்த டிரைவர், ‘எனது 12 வயது மகளும், 7 வயது மகனும் மட்டுமே வீட்டில் உள்ளனர்; எனது மனைவி கடந்த ஆண்டு டிச. 25 (கிறிஸ்துமஸ் தினத்தன்று) இறந்து விட்டார்’ என கூறியுள்ளார்.
உடனடியாக இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வீடியோ மூலமாக தனது கருத்துடன் ஆஷிஷ் வித்யார்த்தி பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.