இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே அவர்கள் இங்கிலாந்து சென்றனர். ஜூலை 20 முதல் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து சென்ற இரு வீரர்களுக்கு கொரொனா பாசிட்டிவ் என செய்தி வெளியானது. மேலும், இரு வீரர்களையும் சோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றும், மற்றொரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் கூறப்பட்டது.
ஆனால் எந்த வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த வீரரையும் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த ஒரு வீரர் ரிஷப் பண்ட் எனவும், அவர் தற்போது தனிமையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு மீண்டும் வரும் ஞாயிறு சோதனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து-ஜெர்மனி இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண ரிஷப் பண்ட் சென்றிருந்தார். மாஸ்க் அணியாமல் நண்பர்களுடன் அவர் இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,
ஒரு வீரருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால், கடந்த 8 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணிகளின் மற்ற வீரர்களுடன் அவர் இணைந்து தங்கவில்லை. ஆகவே, மற்ற வீரர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது என்றார்.