மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை மையம் கொண்டு கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
மத்திய அரசு வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது. விவசாயிகளும் வாபஸ் வாங்கும் வரை நாங்களும் போராட்டத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று ஆந்திராவிலும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பாரத் பந்த் தொடங்கியது. பாஜக ஆளாத மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் இந்த பாரத் பந்துக்கு தார்மீக ஆதரவு அளித்தன.
இந்த முழுஅடைப்பை தொடர்ந்து நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவே அனைத்து அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தனியார் பேருந்துகளும் அங்கு ஓடவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோக்களை இயக்கவில்லை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களுள் போலீஸாரை மீறி நுழைந்து அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.