டெல்லி:-
இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பதற்காக சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புனேவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம்’, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.
மேலும், அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இச்சூழலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது
சீரம் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து சீரம் நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 4-ம் தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சுமார் 92% வரை நோய்தடுப்பாற்றலை தருவதாக கூறப்படுகிறதூ. தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ் நிறுவனத்தால் மட்டுமே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.