மும்பை:-
மக்களுக்கு உதவுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர் சோனு சூட் ஆந்திர மாநில விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களின் ஆபத்பாந்தவனாக உருவெடுத்துள்ளார் சோனு சூட், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் திரும்புவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்தார். வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவினார்.
தற்போது கஷ்டத்தில் உள்ள பலருக்கும் உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகும் பல வீடியோக்களை ஷேர் செய்து கடந்து செல்பவர்கள் மத்தியில், சோனு சூட் ஒருபடி மேலே சென்று, கஷ்டப்படுபவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் தக்காளி விவசாயி ஒருவர், கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியால் சிரமப்பட்டு வந்துள்ளார். உழுவதற்கு, எருதுகளை வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் உழவுக்காக தனது மகள்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அவரது மகள்கள் வயலில் கலப்பையை இழுத்துக் கொண்டு நிலத்தை உழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
எனினும், இந்த வீடியோ கலவையான விமர்சனங்களை பெறத் தொடங்கியது. அவர்களது ஏழ்மை நிலைமையை நினைத்து பலரும் வேதனை தெரிவித்தனர். தனது தந்தையின் நிலையை அறிந்து உதவி செய்த மகள்களை பாராட்டினர். ஒரு சிலர் இது மிகவும் கொடூரமான செயல் என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது தந்தையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த செயல் நம்பும்படியாக இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
யார் என்ன சொன்னால் என்ன மக்களுக்கு துயரம் என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்யும் “மக்கள் ஹீரோ” சோனு சூட் இந்த சம்பவத்திற்கு மட்டும் உதவாமல் இருந்து விடுவாரா என்ன.
இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்திருந்த சோனு சூட்:-
அதில், ‘இந்தக் குடும்பம் ஒரு ஜோடி எருதுக்கு தகுதியானவர்கள் கிடையாது. அவர்கள் டிராக்டருக்கு தகுதியானவர்கள். அதனால் உங்கள் வயலை உழுவதற்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்களை கல்வியில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.
இதனிடையே அந்த குடும்பத்திற்கு சொன்னபடியே டிராக்டரை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். இந்த சம்பவம் தொடர்பாக சோனு சூட்டுக்கு நன்றியை தெரிவித்து அந்த குடும்பம் டிராக்டர் பெற்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர் மீது உள்ள மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களின் நலனுக்காக போராடும் சோனு சூட் மற்றும் அவரது குழுவினரின் சேவை இணையற்றது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.