தக்காளி விலை இன்று 100 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சமையலுக்கு முக்கிய காய்கறியாக உள்ள தக்காளி விலை சமீப காலமாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வருவதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தேவை அதிகரிப்பு, மழை பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்களாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை, புயல் போன்ற காரணங்களால் தக்காளி வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால் விலை பயங்கரமாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, பால் விலை, தங்கம் விலை உயர்வுக்கு மத்தியில் தற்போது தக்காளி விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களை அச்சப்படுத்தியுள்ளது.
மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் தக்காளி உற்பத்தி செய்யும் இடங்களில் செடிகள் கருகி பழங்கள் விவசாய நிலங்களிலேயே வீணாகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 100 ரூபாய்க்கு வந்துள்ள தக்காளி விலை அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.