லக்னோ:-
வீடுகளில் புதிதாக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு தடை விதிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. மேலும், சீனப் பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆனால் அதேசமயம் ஏற்கனவே செயல்பாட்டில் மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள சீனப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முடிவிற்கு அனைத்திந்திய ஆற்றல் பொறியாளர்கள் கூட்டமைப்பு (All India Power Engineers Federation) தலைவர் சைலேந்திர தூபே (Shailendra Dubey) வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைலேந்திர தூபே கூறுகையில்:-
மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants), உலைக் கலன்கள் (Boilers), குழாய்கள் (Tubes) மற்றும் இதர உதிரிபாகங்கள், கருவிகள் ஆகியவை சீனாவிலிருந்து மிக குறைந்த விலையில் இதுநாள் வரையில் வாங்கப்பட்டுவந்தது. ஆனால் அவற்றின் தரம் மிகவும் குறைவாக இருப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாற்றுகள் எழுந்துவந்தது.
இந்நிலையில் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இது சுயசார்பு பாரத திட்டத்தின் இலக்கை அடைவதில் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.