பொதுவாக குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள ஏதுவான உணவு வகைகளையே உண்ண வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்படி செய்வதன் மூலம் குளிர்காலத்தில் தாக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். நாம் உண்ணும் அன்றாட உணவில் காலநிலைக்கு ஏற்றவாறு காய்கறிகளும் பழங்களும் நம் உடலை பாதுகாக்க உதவுகின்றன.
அந்தவகையில் உடல் ஆரோக்கியத்திற்கு ஆப்பிளில் இருந்து ஜூஸ், சாலட் போன்றவற்றை தான் நாம் அதிகம் விரும்பி உண்போம். ஆனால் குளிர்காலத்தில் நம் உடலுக்கு ஆப்பிள் டீ மிகவும் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை தயாரிப்பது மிகவும் சுலபம். ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு அதனுடன் போதுமான அளவு சர்க்கரை தண்ணீர் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை வடிகட்டி பருகலாம் அல்லது அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்தும் பருகலாம்.
எப்போதும் ஆப்பிள் பழங்களை விரும்புபவர்களுக்கு இந்த ஆப்பிள் டீ நிச்சயம் புதுவிதமான அனுபவமாக இருக்கும். இதில் ஏராளமான பயன்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் டீ ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல் உண்ணும் உணவில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க ஆப்பிள் டீ மிக முக்கிய தீர்வாக அமைகிறது. ஆப்பிளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இதனை நாம் டியாக பருகும்போது நிச்சயம் நம் உடம்பில் கலோரிகள் சேராது. இதனால் தைரியமாக இதனை நம் அன்றாட உணவு முறைகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாமும் குளிர்காலத்தில் ஆப்பிள் டீயை பருகி அதன் பலனை பெறலாம்.