டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் மிஸ்டுகால் திட்டம் மூலம் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியின் 70 தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து பிப்ரவரி 11ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி நிலவரங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றன.
அந்தக் கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் மிஸ்டுகால் திட்டம் மூலம் தங்களது இணைப்பை உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 11 லட்சம் மக்கள் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.