!
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசு சார்பில் வர உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக பாரதியார், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை மையமாக கொண்டு இந்த ஆண்டு அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், பாரதியார், வேலுநாச்சியார், வ.உ.சி. போன்றவர்கள் தேசிய அளவில் பிரபலமானவர்கள் இல்லை எனக்கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4வது சுற்று வரை சென்ற நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு நிராகரித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை தென் மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடகாவைத் தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்துடன் கூடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.