டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்க உள்ளார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி டெல்லியின் துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சராக 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், நிகழ்ச்சிக்கு எந்த கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ஆசிரியர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதவியேற்பு விழாவில் 1 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.