புதுடில்லி:
”போன் ஒட்டு கேட்கப்பட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதில் நீதிமன்ற விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வழக்கின் விசாரணையின்போது,
‘இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும்’ என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறி இருப்பதன் மூலம் , போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலின், ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள், யாரைஉளவு பார்க்க வாங்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதி மன்றமும் இந்தக் கேள்வியை எழுப்பும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழுவை அமைத்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்று உள்ளனர்.
‘இவ்வாறு விசாரணைக் குழு அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, 25ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.