கொலையும், கொள்ளையும் ஒரு சேர நடந்தது தான் கோடநாடு வழக்கு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ஏழு மலைகளை கொண்ட கோடநாடு டீ எஸ்டேடின் பங்குதாராக இருந்தனர்.
இந்த எஸ்டேட் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் உச்சியில் தான் அமைந்துள்ளது கோடநாடு பிரம்மாண்ட பங்களா. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை இந்த பங்களாவை முதல்வரின் முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார். பங்களாவை சுற்றி 23 சிசிடிவி ,பங்களாவின் உள்ளே செல்ல பயன்படும் மூன்று பிரதான நுழைவு வாயில்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, கடந்த 2017ம் ஆண்டு ஏப். 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார், மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயமடைந்தார்.
கோடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போலீசார் தேடிக்கொண்டிருந்த நிலையில், கைதுக்கு முன்பே முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த விவகாரம் பெறும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் இன்னோர் முக்கிய குற்றவாளியான சாயானும் சில நாட்களில் சாலைவிபத்தில் சிக்கியதும் பெறுத்த சந்தேகத்தை கிளப்பியது.
சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன்,ஜம்சீர் அலி, உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தற்போது நிபந்தனை ஜாமினில் உதகையில் தங்கியபடி, வழக்கு விசாரணைக்கு சயான் ஆஜராகி வருகிறார். கடந்த 13 வழக்கு விசாரணையின் போது கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் கொடுத்த உத்தரவின்படி, இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை வழக்கின் முதல் குற்றவாளியான சயானிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை செய்துள்ளனர். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
மறு விசாரணை குறித்து 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு பின்னர் தான் இந்த வழக்கு செல்லும் திசை என்ன என்பது தெரியவரும்.
இதனிடையே, காயத்துடன் உயிர் தப்பிய நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண பகதுார் என்பவர் அப்பகுதியில், இருந்த ஒரே நபர். இதனால், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அவர் இருந்தார். நான்கு ஆண்டுகளாக வழக்கு நடந்து வரும் நிலையில், சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பின், அவர் நேபாளம் சென்று விட்டார். தற்போது, இந்த வழக்கில் மறு விசாரணை துவக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கிருஷ்ண பகதுாரை அழைத்து வர வாய்ப்புள்ளதாக,போலீசார் தெரிவித்தனர்.