நாம் வசிக்கும் வீடு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதில் சந்தோஷம், அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எந்தவித தங்குதடையும் இன்றி சுமூகமாக பயணிக்க முடியும். வீட்டில் இருக்கும் நமக்கு நல்சிந்தனை ஏற்பட வேண்டும்.
அதற்கு மாறாக வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டால், அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
யாருடைய வீட்டில் வறுமையின்றி நிறைந்த செல்வமோடு, பிணியில்லா ஆரோக்யமும், செய்தொழிலில் நிம்மதியும், வாழ்வில் முன்னேற்றமும், மனத்தில் அமைதியும் குடிகொண்டிருக்கிறதோ அவர்கள் வீட்டில்தான் நல்ல சக்திகளும், மஹாலஷ்மியும் குடியிருப்பதாக சொல்வார்கள்.
வீட்டில் நேர்மறை சக்திகளைக் கொண்டு வருவதற்கு நாம் செய்ய வேண்டியது:-
நம் வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரிந்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
இதனை காலையில் செய்வதே சாலச்சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டுவிடலாம்.
சிவன் கோயிலிலும் பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரகத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும், பச்சை கற்பூரமும் சேர்ப்பார்கள் சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும் கலந்து இருக்கும்.
நல்ல சக்திகள் நம்முடைய நல் எண்ணங்களிலிருந்து, நல்ல செயல்களிலிருந்தும் உருவாகுபவை.
குல தெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, அதர்ம வழியில் செல்லாமை, ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்பட்டு துன்பத்தை அடைந்தாலும் இறைவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை இருந்தால் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். எத்தகைய சோதனையான நிலையிலும் மனம் தளரமாட்டார்கள். ஆனால் இத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்கள் குறைவே.
வீட்டில் எப்போதும் மெல்லிய நறுமணம் வீசுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதற்காகவே வாசனை எண்ணெய், ஊதுபத்தி, வாசனைக் கட்டைகள் என விற்கப்படுகின்றன. அவற்றை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைத்தால் நல்ல மணம் உங்கள் மனநிலையையும் தூய்மையாக்கும்
இவ்வாறு நாம் வசிக்கும் வீட்டினுள் தினமும் செய்து வந்தால் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை சக்திகள் உண்டாகும்.