2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மீதான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 13வது ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 வீரர்கள் உள்ளனர். இதில் 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 73 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். இதனால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த ஏலத்தின் அடிப்படை விலை ரூபாய் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரூபாய் 1.5 கோடி ஏல மதிப்பீட்டில் 10 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் தனி ஒருவராக இந்திய அணி வீரர் ராபின் உத்தப்பா இடம் பெற்றிருக்கிறார். கடந்தாண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாடி வரை அணி நிர்வாகம் கழட்டி விட்டதால் அவர் ஏலத்திற்கு வந்துள்ளார்.
அதேபோல சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு தலா ரூபாய் 20 லட்சம், 30 லட்சம், 40 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல பட்டியலில் பதினோரு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தான் இந்த ஆண்டு ஏலத்தில் அதிக விலைக்கு போகும் பேட்ஸ்மேன் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டிகள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை, பெண்கள் ஐபிஎல் போன்றவை குறித்த முக்கிய தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.