மூன்றாவது நடுவர் அளித்த தவறான தீர்ப்பால் கோலி டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் போட்டி இன்று மும்பை நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதனால் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 80 ரன்களாக உயர்ந்து வலுவான நிலையில் இந்திய அணி இருந்தது.
ஆனால் திடீரென வந்த ஸ்பின்னர் அஜாஷ் படேல், அடுத்தடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சீனியர் வீரர் புஜாரா 5 பந்துகளை சந்தித்து டக் அவுட்டும், விராட் கோலி கோல்டன் டக் அவுட்டும் ஆனார்.
விராட் கோலி பந்தை அடித்தபோது அது பேட், பேடிற்கு இடையில் உரசி சென்றது. விராட் கோலி ரிவியூ எடுத்தபோது, மூன்றாம் நடுவரால் முடிவினை தீர்மானிக்க முடியவில்லை.
இதனால், அவர் களத்தில் இருக்கும் நடுவரின் தீர்ப்பை சரியென கூறி LBW அவுட் கொடுத்தார். கோலி இதனை ஏற்காமல் நடுவர் நிதின் மேனனிடம் முறையிட்டு பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக, இந்தியா ஓரே ஓவரில் இரண்டு மெயின் விக்கெட்களை, ரன்களை எதுவும் இல்லாமல் இழந்தது. இந்த போட்டியில் எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலி அவுட் என நடுவர்கள் அறிவித்தது தவறான முடிவு என ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பங்களை தாண்டி முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற முடிவுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்றும் நடுவர்கள் திறன் மீதும் கேள்வி எழும்பும் என்றும் ரசிகர்கள் காரசாரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மும்பை டெஸ்ட் போட்டியில் 3வது நடுவராக விரேந்தர் சர்மா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.