சென்னையில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிக்காக 10 கோடி செலவில் 100 ரோபோ இயந்திரங்கள் வாங்குவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் 1,894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 468 இடங்களில் சுமார் 440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் தூர்வாரும் பணியை செய்யும்போது 3 லட்சம் டன்னுக்கு மேற்பட்ட வண்டல்கள் தூர்வாரப்படும். வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணியின் போது 4 லட்சம் டன் வண்டல்கள் தூர்வாரப்பட்டது.
இந்த தூர்வாரும் பணியில் பெரும்பாலும் மனிதர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற மாநில பேரிடர் மீட்பு நிதியின் மூலம் 10 கோடி செலவில் 100 ரோபோ இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய நுழைவு கொண்ட மழைநீர் வடிகால்களில் மனிதர்கள் இறங்காமல், இந்த இயந்திரத்தால் சுத்தம் செய்ய முடியும். இந்த பாண்டிகூட் ரோபோ இயந்திரம் 17 நிமிடங்களில் சாக்கடையை தூய்மை செய்துவிடும். இந்த ரோபோ இயந்திரம் தற்போது கோவை, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் பயன்படுத்தபடுகிறது.