கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கணேசபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (வயது 24). ஏற்கனவே இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் 4-வது முறையாக மீனா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் மீனா ஏற்றப்பட்டு வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது மீனாவிற்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் பைலட் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் மருத்துவ உதவியாளர் ரம்யா, மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அப்போது மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.