கீழடி:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் விலங்கின எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மூன்று இடங்களிலும் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி முதல் முறையாக மணலூரிலும் பணிகள் தொடங்கின.
மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர். மே 28-ம் பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றியநிலையில் சிலதினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின.
மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கீழடியில் விலங்கின எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கெனவே கிடைத்த எலும்புகளைவிட, தற்போது கிடைத்த எலும்புகள் உருவத்திலும் அளவிலும் மாறுபட்டிருப்பதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.