சென்னை:
2020-2021-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. முதலில் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 497 மாணவ-மாணவிகளும், அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வில் 69 ஆயிரத்து 752 மாணவ-மாணவிகளும் இடங்களை தேர்வு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டிலும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து இருக்கிறது. மொத்தம் காலியாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கிட்டதட்ட 93,000 இடங்கள் காலியாக இருக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக கலந்தாய்வு தாமதமாக தொடங்கிய நிலையில், கலந்தாய்வு முடிந்த மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்???? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மற்ற செமஸ்டர் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கலந்தாய்வு முடிக்கப்பட்ட மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் வகுப்புகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, B.E,B.Tech,B.Arch என்ஜினீயரிங் படிப்புகளை கொண்ட தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்பு கல்லூரிகளில் முதல் செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது என்றும், இவர்களுக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 24-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட நாட்களில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு,1 வாரத்துக்கு 6 நாட்கள் வீதம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.