தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் விதமாக 14 பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்த விழிப்புணர்வு திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக, மாற்றுப் பொருட்களின் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்பி தயாநிதி மாறன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்ட வாரியத்தின் தலைவர் உதயன், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.