சென்னை:-
விளைநிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டம்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர். இந்த தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, இது தொடர்பாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மழையில் நெல் வீணாவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காய வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நெல், மழையில் நனைவதாகவும் இது சம்பந்தமாக குழு விவரங்களை பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மழையில் நெற்பயிர்கள் வீணாவதை தடுக்க நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உள்ளதாகவும், நெல் கொள்முதலுக்காக 468 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.