சென்னை:-
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, திமுக எம்.எல்.ஏ.-மான ஜெ.அன்பழகனுக்கு(61) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் (ரேலா மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்வேறு உபாதைகள் இருப்பதால் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.