சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வியாளர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஆசிரியர் சங்கம் கல்வியாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தினோம். தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. தேர்வு எப்படி நடத்த வேண்டும் என முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
கொரோனா எப்போது குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை கூறும் என எதிர்பார்க்கிறோம். பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர, ரத்து செய்யப்படாது என அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இந்த காலக்கட்டங்களில் அவர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என ஆலோசித்துள்ளோம் எனவும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். தேர்வு நடத்தினால் தேவையான அளவு கால அவகாசம் கொடுத்து தேர்வு தேதி அறிவிப்போம் என அவர் கூறினார்.